வெலிங்டன்: தாம் நல்ல பார்மில் இருப்பதாகவும் தமது பணியை சிறப்பாகவே செய்து வருவதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தனது முதல் ஒரு நாள் போட்டி அரை சதத்தை நிறைவு செய்தார் அஸ்வின். இப்போட்டியில் இந்திய அணி 'டை' செய்வதற்கு அஸ்வின்பெரிதும் உதவியாக இருந்தார். விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்த நிலையில் அஸ்வினும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதுபற்றி அஸ்வின் கூறுகையில், இது எனது பேட்டிங் திறமையை நிரூபிப்பதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும். அதிக ஓவர் வரை பேட் செய்யும் வாய்ப்பு 7-வது வீரராக களமிறங்கும் எனக்கு எளிதில் கிடைக்காது. இதை நான் சரியாக பயன்படுத்தினேன்..
எனது பந்து வீச்சை விமர்சித்து வரும் பத்திரிகைகளை நான் படிப்பதில்லை. நான் எனது பணியை சரியாக செய்து வருகின்றேன். கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் எனது பந்து வீச்சு எடுபடாமல் போயிருக்கலாம். ஆனால் எப்போதும் நான் என் முழு உத்வேகத்தோடு என் பங்களிப்பை அளித்து வருகின்றேன்.
இதுகுறித்து கேப்டன் டோணி மற்றும் பயிற்சியாளருடன் பேசியுள்ளேன். நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன் என்றார்.