சாம்பியன்ஸ் டிராபியில் புது சரக்குகளோடு களமிறங்க உள்ளேன்.. எதிரணிகளை அச்சுறுத்தும் அஸ்வின்
சென்னை: புதுப்புது யுக்திகளுடன் பந்து வீச தயாராகியுள்ளதாக சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய சுழற்பந்து வீச்சு ஜாாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மினி உலககோப்பை என வர்ணிக்கப்படுவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர். வருகிற ஜூன் 1ம் தேதி இங்கிலாந்தில் இத்தொடர், தொடங்குகிறது. இதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.
குடல் இறக்கம் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. அதேநேரம், தற்போது முழு உடல் தகுதி பெற்றுள்ள அஸ்வின், சாம்பியன் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புது யுக்தி
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அஸ்வின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து கூறியதாவது: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாள போகிறேன். அதை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் சோதித்து பார்க்க திட்டமிட்டு இருக்கிறேன்.

பயிற்சி ஆட்டங்கள்
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் புது யுக்திகளை பயன்படுத்தி பந்து வீசுவேன். இது போட்டி தொடரில் சிறப்பாக விளையாட புது யுக்தி உதவும், நிச்சயம் பயன் அளிக்கும் என நம்புகிறேன்.

ஐசிசி விதிமுறைகள் மாறிடுச்சே
ஒருநாள் போட்டியில் ஐ.சி.சி. புதிய விதிகளை கொண்டு வந்து உள்ளதால் பந்துவீச்சில் பழைய யுக்திகளுடன் செயல்படுவது பலன் அளிக்காது. அதற்கு ஏற்றாற்போல் புதிய யுக்திகளை புகுத்த முடிவு செய்து உள்ளேன். இதற்காக போதிய அளவு பயிற்சி பெற்றுள்ளேன்.

கண்டுகொள்வேன்
முதல் இரு பயிற்சி ஆட்டங்களில் இந்த தொடரில் நான் எப்படி செயல்படுவேன் என்பது குறித்த தெளிவு எனக்கு கிடைத்துவிடும். அதற்கேற்ப பந்து வீச்சில் மாற்றங்களை செய்துகொள்வேன்.

ஐபிஎல் வேண்டும்
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு வரப்பிரசாதமாகும். ஐபிஎல் தொடர் மூலம், திறமை வாய்ந்த இளம் வீரர்கள் கண்டறியப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications