பாகிஸ்தானுக்கு எதிராக 183*.. ஒருநாளும் கனவில் கூட நினைத்ததில்லை.. விராட் கோலியின் அசத்தல் பேட்டி!
பெங்களூர்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன்கள் விளாசுவேன் என்று ஒருநாளும் கனவில் கூட நினைத்ததில்லை என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பழைய யுத்தம் பற்றிய நினைவுகளை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர் விராட் கோலி 183 ரன்களை விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால், 330 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்தது. விராட் கோலியின் தரமான சம்பவங்களில் மிகச்சிறந்த சம்பவமாக மாறிய தருணம் குறித்து அவரே பகிர்ந்துள்ளார்.
இந்த இன்னிங்ஸ் பற்றி விராட் கோலி பேசுகையில், ஒருநாள் போட்டிகளில் 183 ரன்கள் விளாசுவேன் என்று ஒருநாளும் கனவில் கூட நினைத்ததில்லை. அன்றைய நாளில் ரன்கள் சேர்க்க சேர்க்க வேறு ஒரு பரிணாமத்திற்கு சென்றேன் என்றே நினைக்கிறேன். எனக்கு தோன்றியபடி ஷாட்களை விளையாடினேன். அப்போது ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த போது, நான் இன்னும் வலிமையாக உணர்ந்தேன். என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் போன்ற வலிமையான அணிக்கு எதிராக 180 ரன்களை விளாசுவதெல்லாம் மிகப்பெரிய விஷயம்.
அன்றைய ஆட்டத்தை பார்த்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் எப்போதும் சதம் விளாச வேண்டும் என்றுதான் நம்பி இருக்கிறேன். ஆனால் 180 ரன்களை விளாசுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடியதில்லை. அதனால் அன்றைய ஆட்டத்தில் அவ்வளவு பெரிய இலக்கை எப்படி கட்டமைக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications