தொடரை கைவிட்ட இந்தியா
ஐசிசி அன்டர் -19 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி துவங்கி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிலையில், இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் மோதின. நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா மெதுவாக ஆட்டத்தை துவக்கினர். இந்நிலையில் 17 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து சக்சேனா ஆட்டமிழக்க, அடுத்து வந்த திலக் வர்மா 38 ரன்களிலும், பிரியம் கர்க் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போட்டியில் நிலையாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமடிக்க முயற்சித்தார். ஆனால் 88 ரன்களிலேயே அவர் ஆட்டமிழந்தார்.
தொடர் நாயகன் விருது
இந்த போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், 4 முறை கோப்பையை வெற்றி கண்டுள்ள இந்தியா, முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வங்கதேசத்திடம் கோப்பையை பறிகொடுத்தது. இந்த தொடரில் தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஒரு போட்டியை தவிர்த்து குறைந்த பட்சம் அரைசதம் அடித்து மொத்த ரன்களாக 400 அடித்த ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் நாயகனின் சாதனை பயணம்
மும்பைக்கு தன்னுடைய தந்தையுடன் வந்த ஜெய்ஸ்வால், அவரது தந்தை அங்கிருந்து வெளியேறியதை அடுத்து, பானிப்பூரி விற்று, தன்னுடைய கிரிக்கெட் கனவை நோக்கி பயணம் மேற்கொண்டவர். இவரது தொடர் வெற்றிகள், தற்போது அன்டர் -19 உலக கோப்பை தொடரின் நாயகன் விருது போன்றவை ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியது. அடுத்ததாக இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று ஆடவுள்ளார்.
ஜெய்ஸ்வாலின் சபதம்
அன்டர் 19 உலக கோப்பையை இந்தியா பறிகொடுத்தாலும், தொடர் நாயகன் விருதை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளது, இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஸ்வால், தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பை தொடரில் விளையாடியது தனக்கு மிகசிறந்த பயிற்சியாக, சர்வதேச போட்டிகளை ஆடுவது குறித்த தெளிவை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஜெய்ஸ்வால் திட்டவட்டம்
இந்த தொடர் தனக்கு கிரிக்கெட் குறித்த தெளிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜெய்ஸ்வால், அடுத்ததாக இந்திய அணியில் இடம்பெறுவதே தனது இலக்கு என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த ஒன்றை கருத்தில் கொண்டு வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவேன் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.