கோவை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்ததற்கு, பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்காததே முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே நேரடியாக அஸ்வினை இந்திய அணியில் சேர்க்காத முடிவை எடுத்த ரோகித் சர்மாவை கடுமையாக சாடினார். ஆனால் அஸ்வினை அதனை பற்றி கவலைப்படாமல் அடுத்த இரு நாட்களில் கோவை வந்து டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் தனியார் நாளிதழுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன். அதனால் அந்தப் போட்டியில் விளையாட ஆவலாக இருந்தேன். கடந்த முறை ஆடிய இறுதிப்போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன்.
இப்போது மட்டுமல்லாமல், 2018 -19 ஆண்டுகளில் கூட வெளிநாடுகளில் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன். கடந்த இங்கிலாந்தில் ஆடிய டெஸ்ட் தொடரில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் என்ற திட்டத்துடன் இந்திய அணி களமிறங்கியது. அதனால் அதே திட்டத்துடன் இறுதிப்போட்டியை அணுகி இருக்கலாம். இங்கிலாந்தில் 4வது இன்னிங்ஸில் தான் ஸ்பின்னர்களுக்கு அதிக வேலை இருக்கும். போதுமான ரன்களோடு 4வது இன்னிங்ஸை எதிர்கொண்டால், ஸ்பின்னர்கள் நிச்சயம் வென்று கொடுப்பார்கள். அது முழுக்க முழுக்க மனநிலையை பொறுத்தது.
சிறு வயதில் சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ரன்கள் குவித்த போதும், பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தவில்லௌயே என்று நினைத்தே, நான் சிறந்த பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் நாளை நான் பயிற்சிக்காக எனது ஷூவை போடும் போது, எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துவிட்டு நிச்சயம் பந்துவீச்சாளராக மாறி இருக்க கூடாது என்று வருத்தம் ஏற்படுகிறது.
எந்த பேட்ஸ்மேனையும் ஆடுகளத்திற்காக பெஞ்ச் செய்ய மாட்டார்கள். ஆனால் பவுலர்களுக்கு மட்டும், குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு மட்டும் நடந்துகொண்டே இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், நான் இந்திய பிளேயிங் லெவனில் இல்லை என்று தெரியும். அதனால் பெஞ்சில் இருந்து இந்திய வீரர்களுக்கு எப்படி உதவலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.