டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் குறைந்தது 2 ஓவராவது சமாளிப்பார் என்று நினைத்ததாகவும், ஆனால் 2 பந்துகளில் ஆட்டமிழந்ததாகவும் இந்திய வீரர் கேஎல் ராகுல் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் மீதான கதைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. களத்தில் நடந்த சம்பவங்கள், களத்திற்கு வெளியில் நடந்த சம்பவங்கள், ஓய்வறையில் நடந்த சம்பவங்கள் என்று வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் அமர்ந்து உரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் குறித்தும், கேஎல் ராகுல் தயாரான விதம் குறித்தும் பேசியுள்ளார். அந்த வகையில், ரோகித் சர்மா - இஷான் கிஷன் இருவரும் பேட்டிங்கிற்கு களமிறங்கும் போது குளிக்க சென்றுவிட்டேன். பின்னர் இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின் வெளியே வந்த நான், எனது கால்களில் பேடை கூட கட்டவில்லை. இதன் பின்னர் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார்.
அப்போது தான் பேட்டிங் செய்வதற்கே தயாராகினேன். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 2 ஓவர்களாவது தாக்குபிடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் 2 பந்துகளில் ஆட்டமிழந்துவிட்டார். வழக்கமாக பிட்ச் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தால் 3 விக்கெட்டுகளை இழப்பதற்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 ஓவர்களாவது ஆகும். இதன்பின் நான் களம் புகுந்த பின், முதல் 10 ஓவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஆடலாம் என்று முடிவு செய்தோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கிய போது, முதல் 10 ஓவர்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அப்போது குறைந்தபட்ச ரன்களை எடுத்துவிட்டு, சில ஓவர்களுக்கு பின் ரன்கள் எடுக்க தொடங்குவோம். முதல் ஆஸ்திரேலிய அணி பக்கம் ஆட்டம் இருப்பதை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். நீங்களும் தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசினீர்கள்.
பார்ட்னர்ஷிப் 70 ரன்களை எட்டும் வரை நாம் இருவரும் எனர்ஜியை சேமித்து கொண்டு, 2 ரன்களை ஓட வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஃபீல்டர்களுக்கு ஏற்ப விளையாட தொடங்கிய பின், நாமாக ரன்களை சேர்க்க தொடங்கிவிட்டோம். பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.