பெங்களூர்: என்கிட்ட இருக்குறது பழைய நோக்கியா போன்தாங்க.. சமூக வலைத்தளத்தில் நடக்கும் இந்தியா-வங்கதேச போட்டி பற்றிய கமெண்ட் பற்றியெல்லாம் எனக்கு தெரியாதுங்க.. என கூறினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா.
பெரும்பாலும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பதை தவிர்க்கும், நெஹ்ரா, பெங்களூரில் நாளை நடைபெற உள்ள இந்தியா-வங்கதேசம் போட்டி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேட்டியளித்தார்.
அப்போது, இந்தியா-வங்கதேசம் நடுவே தீவிர போட்டி இருப்பதாகவும், ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர் டோணியின் தலையை வங்கதேச பவுலர் டஸ்கின் கையில் வைத்திருப்பதை போல வங்கதேச ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் உருவாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் நிருபர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், நெஹ்ரா கூலாக ஒரு பதில் சொன்னார். அதை நீங்களே பாருங்கள்: நீங்கள் கேள்வியை தப்பான நபரிடம் கேட்டுவிட்டீர்கள். நான் இன்னமும், பழைய நோக்கியா போனைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைத்தளத்திலும் நான் கிடையாது. நான் செய்தித்தாள் கூட படிப்பது கிடையாது. இவ்வாறு நெஹ்ரா கூறி தப்பிவிட்டார்.
இதனிடையே நெஹ்ராவின் நண்பரான வீரேந்திரசேவாக்கை அணுகிய பிசிசிஐ, நெஹ்ராவை சோஷியல் மீடியாவில் இணைக்க சிபாரிசு செய்தது. அவரும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன் என கூறி நழுவியது குறிப்பிடத்தக்கது.