ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாண்டியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நான் எப்பொழுதும் கபில் தேவாக இருக்க ஆசைப்பட்டதில்லை. என்றும் ஹார்டிக் பாண்டியாவாகவே இருக்க ஆசைப்படுகிறேன். நான் இதுவரை 40 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அனைத்திலும் ஹார்டிக் பாண்டியாவாக விளையாடினேனே தவிர கபில் தேவ் ஆக இல்லை. அவருடைய காலத்தில் அவர் சிறந்தவர். என்னை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். நான் மற்றவர்கள் கூறுவதை பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. நான் எனது நாட்டுக்காக விளையாடுகிறேன் என்றும் கூறினார்.சமீபத்தில் மைக்கேல் ஹோல்டிங், ஹார்டிக் பாண்டியா ஒரு முழுமையான ஆல் ரவுண்டர் இல்லை என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ் அவரது காலத்தில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் என்பது கூடுதல் செய்தி.