பெங்களூரு: கிரிக்கெட்டில் நான் வழக்கம் போல் விளையாடும் அதிரடி ஆட்டத்தையே விளையாட விரும்புவதாக இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரித்வி ஷா, சச்சின், சேவாக் மற்றும் லாராவின் கலவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியால் போற்றப்பட்டார். இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்றெல்லாம் பேசப்பட்ட பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை 2021ஆம் ஆண்டு ஜூலையுடன் முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி ஃபார்மை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஷார்ட் பால் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் பிரித்வி ஷாவிடம் திணறியது களத்திலேயே கண்கூடாக தெரிந்தது. இதனால் பிரித்வி ஷா மீண்டு வருவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணிக்காக பிரித்வி ஷா களமிறங்கினார்.
இதனால் பிரித்வி ஷா சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 26 மற்றும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பிரித்வி ஷா பேசுகையில், எனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. என்னால் புஜாராவை போலவோ அல்லது புஜாராவால் என்னை போலவோ ஆட முடியாது. இத்தனை ஆண்டுகளாக எப்படி ரன்கள் சேர்த்தேனோ அப்படியே விளையாட விரும்புகிறேன்.
நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமானதாக கருதுகிறேன். ரெட் பால் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு முதலே சிறப்பாகவே விளையாடி வருகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட் அப்படி அமையவில்லை. நான் நினைத்ததற்கு எதிராக ஐபிஎல் தொடர் அமைந்தது. என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டை விடவும், டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு பேட்ஸ்மேனுக்கு அதிக சவால் அளிக்கும் என்று தெரிவித்தார்.