லண்டன்: இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா ஒரு வழியாக இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசி மீண்டும் ஃபார்மிற்கு வந்திருக்கிறார். அதிலும் ஒருநாள் போட்டியில் 153 பந்துகளில் 11 சிக்சர்கள், 28 பவுண்டரிகள் உட்பட 244 ரன்கள் சேர்த்து அசத்தியது வியப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் பிரித்வி ஷா மீண்டும் தனக்கான இடத்தை இந்திய அணியில் பிடிப்பார் என்று பலரும் சொல்ல தொடங்கியுள்ளனர்.
பேட்டிங் டெக்னிக்கில் பிரச்சனை, பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள திணறியது, யூட்யூபருடனான மோதல், ஊக்க மருந்து சர்ச்சை என்று களத்திலும் களத்திற்கு வெளியேயும் பிரித்வி ஷா எதிர்கொண்ட சர்ச்சைகள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் விமர்சனத்திற்கு அஞ்சி, யாரிடமும் பேசாமல் தவறையும் சரி செய்யாமல் இருந்தது கூடுதல் பாதிப்பையும் ஏற்படுத்தியது.

இதனால் நல்ல திறமையான கிரிக்கெட் வீரர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வீணாகிறாரே என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரித்வி ஷாவுக்கு சரியான பிரேக் கிடைத்திருக்கிறது. 244 ரன்களை ஒருநாள் போட்டியில் விளாசியதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை முறியடித்திருக்கிறார்.
துலீப் டிராபியில் ஆடிவிட்டு தியோதர் டிராபியில் பங்கேற்காமல் பிரித்வி ஷா சென்ற போது, இதெல்லாம் தேவையா என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் பிரித்வி ஷா சுக்குநூறாக உடைத்துள்ளார். இதுகுறித்து பிரித்வி ஷா பேசுகையில், சாதனைகள் முறியடித்தது பற்றி எதுவும் தெரியாது. இதுபோல் இன்னும் பல இன்னிங்ஸ்கள் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் எதிர்காலத்தை பற்றி அதிகம் சிந்திக்காமல், அடுத்த போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போதைய சூழலில், அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வெற்றிபெற வைப்பது மட்டுமே என் குறிக்கோளாக உள்ளது. எனக்கு சிறப்பாக பேட்டிங் செய்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் எனது ரன்களும், பேட்டும் தான் பதில் அளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒரு கிரிக்கெட் வீரராக அனைத்து சூழல்களிலும், அனைத்து பிட்ச்களிலும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் தரையிறங்கிய போதுப் குளிர் வாட்டி வதைத்தது. அதனால் குளிரை தடுக்கும் உடைகளை அணிந்து விளையாடி வருகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த நண்பர் பிரிண்டன் மற்றும் நார்த்தம்டன்ஷையர் அணி நிர்வாகத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இன்னும் அதிக வெற்றிகளை பெற்று கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.