மும்பை: ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம்பெறாததால் அதிர்ச்சியடைந்ததாக இந்திய அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்தவர் ஷிகர் தவான். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் என்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தான். ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் தளபதியாக முன் நின்று அனைத்து அணிகளுக்கும் எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் ஷிகர் தவான்.

இவரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் குறைந்தது. இளம் வீரர்களான கேஎல் ராகுல், சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரின் எழுச்சி காரணமாக ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.
அண்மையில் கூட ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து ஷிகர் தவான் பேசுகையிலும் கூட எந்த சூழலிலும் அணி நிர்வாகத்தை ஒரு முறை கூட விமர்சித்து பேசாதது ஆச்சரியமளிக்கிறது.
ஷிகர் தவான் பேசுகையில், ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியில் எனது பெயர் இல்லாததால் முதலில் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகத்தின் மனநிலையை புரிந்துகொண்டேன். நிச்சயம் இந்திய அணிக்காக வித்தியாசமாக ஏதோ செய்கிறார்கள் என்று தெரிந்தது. ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்த உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அணியில் முழுக்க முழுக்க இளம் வீரர்கள் இருக்கிறார்கள். நன்றாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய அணிக்குள் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான வாய்ப்பை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் எனது பேட்டிங் பயிற்சியை விடாமல் தொடர்ந்து வருகிறேன். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
இதுவரை எந்த தேர்வுக் குழு நபருடனும் எனது எதிர்காலம் பற்றி பேசியதே இல்லை. இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கிறேன். அடுத்ததாக ஐபிஎல், விஜய் ஹசாரே தொடர், சையத் முஷ்டாக் அலி தொடர் உள்ளிட்டவற்றுக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.