லண்டன்: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் மீண்டும் செய்வேன் என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. இருப்பினும் ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. பேர்ஸ்டோவ் ரன் அவுட் விவகாரம், அலெக்ஸ் கேரி முடி வெட்டிய சர்ச்சை என்று புதிது புதிதாக சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் சர்ச்சைகளில் சிக்கிய அலெக்ஸ் கேரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த இரு விவகாரங்கள் குறித்து அலெக்ஸ் கேரி பேசுகையில், தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய போது பேர்ஸ்டோவை போலவே நானும் ஆட்டமிழந்திருக்கிறேன். ஆனால் அந்த ரன் அவுட்டிற்கு பின், ஒவ்வொரு முறையும் எனது எச்சரிக்கை உணர்வு அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாராலும் எந்த சூழலிலும் ரன் அவுட் செய்யப்படலாம் என்று கவனமாக இருப்பேன். அந்த எச்சரிக்கை உணர்வும் பேர்ஸ்டோவிடம் இல்லை.
2வது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் மீண்டும் பேர்ஸ்டோவ் கிரீஸில் இருந்து வெளியேறிக் கொண்டே இருந்தார். இதனை நன்றாக கணித்து தான் ரன் அவுட் செய்தேன். அதனால் கிரிக்கெட்டின் புனிதம் மாசுப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு மீண்டும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ரன் அவுட் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட லண்டன் வந்ததில் இருந்து நான் எனது முடியை வெட்டிக் கொள்ளவே இல்லை. அந்த சர்ச்சை குறித்து ஏற்கனவே கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் கொடுத்துவிட்டது என்று கூறினார். அலைஸ்டர் குக் வர்ணனையில் கிண்டல் செய்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அலெக்ஸ் கேரி, இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்று கூறினார்.