மும்பை: உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய முகமது ஷமி முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான், முகமது ஷமிக்கு வாழ்த்து கூற மறுத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரராக மாறியுள்ளார் முகமது ஷமி. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் ஷர்துல் தாக்கூரை வெளியில் அமர வைத்து, முகமது ஷமியை உள்ளே கொண்டு வந்தது இந்திய அணி நிர்வாகம்.

இதன் பின் களமிறங்கிய முகமது ஷமி 4 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதில் இரு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ்-க்கு முகமது ஷமி வீசிய பந்துகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளால் தற்கொலை எண்ணங்களுடன் இருந்த முகமது ஷமி, அனைத்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து இந்திய அணிக்காக வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் முகமது ஷமி ஆட்டம் குறித்து முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் பேசுகையில், உலகக்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணி வாழ்த்துகிறேன். ஆனால் முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது.
அதேபோல் முகமது ஷமி நன்றாக விளையாடினால், இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பார். இந்திய அணியில் இருந்தால் நன்றாக சம்பாதிக்க முடியும். அவர் அவருக்கும், எங்கள் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். அதனால் எனது வாழ்த்துகள் இந்திய அணிக்கு மட்டுமே என்று கூறியுள்ளார். முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் முகமது ஷமி ஏராளமான பாதிப்புகளை சந்தித்தார். ஒருபக்கம் காயமடைந்த அவர், இன்னொரு பக்கம் மனைவியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். முகமது ஷமி மீது அவரது மனைவி மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள், வரதட்சணை கொடுமை, பாலியல் குற்றச்சாட்டுகள், குடும்ப வன்முறை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதனால் சில மாதங்களுக்கு பிசிசிஐ முகமது ஷமியுடனான ஒப்பந்தத்தை நிறுத்த வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்பின் பிசிசிஐ விசாரணையில், முகமது ஷமி மனைவி ஹாசின் ஜஹான் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகள் பொய் என்பது வெளி வந்தது. அதன்பின் ஷமியுடனான ஒப்பந்தம் மீண்டும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.