துபாய்: நாடு திரும்பிய பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்க உள்ளதாக துபாயில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஷேவாக் இன்று 37வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவர் எந்த ஒரு தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் துபாயில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டி என்ற கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் போட்டியின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஷேவாக், "சர்வதேச போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறாவிட்டால் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட முடியாது. ஆகையால் இந்தியா திரும்பியதும் நான் எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன்" என்றார்.
ஷேவாக்கின் இந்த பேச்சுதான் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டதாக ஊடகங்களில் நேற்று இரவு வெளியாகின. இதன் பின்னர் ஷேவாக்கை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது, இன்னமும் ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக தாம் அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது ஷேவாக் நாடு திரும்பிய பின்னர் அதிகாரப்பூர்வமாக ஓய்வு முடிவை அறிவிக்க இருக்கிறார். இந்திய அணியின் முன்னணி வீரர் ஜாகீர்கான் ஓய்வு முடிவை அறிவித்த 2 நாட்களிலேயே ஷேவாக்கும் ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் ஷேவாக். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் கடைசியாக விளையாடினார்.
251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்களைக் குவித்திருக்கிறார் ஷேவாக். அதேபோல் அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களைக் குவித்திருக்கிறார்.