களத்தில் வாய்க்கு வந்தபடி திட்டு.. போட்டி முடிந்ததும் வாய் நிறைய ஷொட்டு.. இது ராகுல்-கோஹ்லி நட்பு
பெங்களூர்: தன்னை இரண்டே ரன்களில் பரிதாபமாக ரன் அவுட் செய்துவிட்டிருந்தாலும் கூட, கேப்டன் என்ற வகையில் சுயநலம் மறந்து கே.எல்.ராகுலின் திறமையை பாராட்டியுள்ளார் விராட் கோஹ்லி.
பெங்களூரில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இந்தியா முதலில் பேட் செய்தது. விராட் கோஹ்லியும், 'மண்ணின் மகன்' கே.எல்.ராகுலும் ஓப்பனிங்கில் களமிறங்கினர்.
ரன் ரேட் மெதுவாக சென்றபடி இருந்தது. முதல் இரு டி20 போட்டிகளிலும் இந்தியா அதிக ஸ்கோரை அடிக்க முடியவில்லை. இறுதி போட்டி என்றே அழைக்கப்பட்ட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நேற்றைய போட்டியில் ஓப்பனிங்கில் கூடுதல் நேரம் நின்று ஆட வேண்டும் என்பதுதான் கோஹ்லி விருப்பம். அதற்கேற்ப அவர் மெல்ல சிங்கிள்களை தட்டிக்கொண்டிருந்தார்.

ரன்அவுட்டான கோஹ்லி
இந்நிலையில்தான் ஆட்டத்தில் அந்த திருப்பம் ஏற்பட்டது. கோஹ்லி பேட் செய்தபோது ஜோர்டான் வீசிய பந்து கோஹ்லி கால்காப்பில் பட்டு அருகேயே விழுந்தது. இருப்பினும் சிங்கிள் ரன் எடுக்கலாம் என நினைத்த கோஹ்லி ரன் ஓட எத்தனித்தார். மறுமுனையில் ராகுலும் ஓட முற்பட்டார். ஆனால் ஜோர்டான் பந்தை எடுத்துவிடவே ராகுல் 'வேண்டாம்' என கோஹ்லியை பார்த்து கூறினார். அதற்குள்ளாக ஜோர்டான் பந்தை ஸ்டம்பில் வீசி கோஹ்லியை ரன் அவுட் செய்தார்.

கோஹ்லி கோபம்
முக்கியமான போட்டியில் இப்படி ஒரு ரன்அவுட்டை கோஹ்லி எதிர்பார்க்கவில்லை. எனவே அவுட்டானதும், ராகுலை பார்த்து திரும்பி நின்று 'என்னப்பா.. இப்படி பண்ணிட்டியே..' என்பதை போல ஏதோ சொல்லி திட்டியபடி கையை நீட்டி காண்பித்தார். இருப்பினும் ராகுல் பேயறைந்தவரை போல கோஹ்லி முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நல்ல தொடக்கம்
இதன்பிறகு களமிறங்கிய ரெய்னாவுடன் சேர்ந்து கொண்டு ராகுல் சிறப்பாக சில ஷாட்டுகளை விளாசி, 'பாவ பிராயசித்தம்' தேடிக்கொண்டார். ராகுல் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் பௌல்ட் ஆனார்.

கோஹ்லி குளிர்ச்சி
இந்நிலையில் டோணி, ரெய்னா அரை சதம் உதவியோடு இந்திய அணி 202 ரன்களை குவித்தது. 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 கோப்பையையும் வென்றது. இதனால் கோஹ்லி மனது குளிர்ந்தது.

கோஹ்லி புகழாரம்
போட்டிக்கு பிறகு கோஹ்லி கூறுகையில், ராகுல் மிகவும் சாந்தமானவர். அதேநேரம், மிகுந்த தன்னம்பிக்கையும் உள்ளவர். இதுபோன்ற கூட்டு குணாதிசயம் அமைவது மிகவும் அபூர்வமாகும். எனக்கு 24 வயதாக இருக்கும்போது, இப்போது ராகுல் எப்படி இருக்கிறாரோ அப்படி ஸ்மார்ட்டாக இருந்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ராகுல், நல்லவர், வல்லவர்
ராகுலுக்கு எப்போது ஷாட்டுகளை ஆட வேண்டும் என்பது நன்கு தெரிகிறது. இதற்காக அவர் ஹார்ட் ஒர்க் செய்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு அவர் பெறுமளவில் முன்னேறியுள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக ராகுல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications