ஜாம்நகர் : ஜடேஜாவின் கிரிக்கெட் கனவுக்காக வாட்ச்மேன் பணியாற்றியும், 20 லிட்டர் பால் கேன் தூக்கி சென்று நடந்தும் பாடுபட்டதாக அவரது தந்தை அனிருத்சிங் ஜடேஜா கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் குடும்ப விவகாரம் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே விவாதமாக மாறி வருகிறது. திருமணத்திற்கு பின் ரவீந்திர ஜடேஜாவின் மாற்றங்கள், மனைவி ரிவாபா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டிற்குள் ஜடேஜா சென்றது, சொத்துகள் பெயர் மாற்றியது என்று ஜடேஜாவின் மனைவி ரிவாபா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் அனிருத்சிங் ஜடேஜா.

இதனைத் தொடர்ந்து ரவீந்திரா ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் மனைவியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் முயற்சி இது. தந்தை அனிருத்சிங் ஜடேஜா கூறிய கருத்துகள் பொய்யானவை. அதனை ரசிகர்கள் மற்றும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். நானும் கருத்து சொல்ல ஏராளமானவை உள்ளது. ஆனால் பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்று பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா அளித்துள்ள பேட்டியில், ரவீந்திர ஜடேஜாவின் கனவை எட்டுவதற்காக நாங்கள் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறோம். 20 லிட்டர் கொண்ட பால் கேன்களை தோளில் சுமந்து சென்றிருக்கிறேன். வாட்ச்மேனாக பணியாற்றி இருக்கிறேன். நாங்கள் ஒன்றும் பணக்கார குடும்பம் கிடையாது. என்னை விடவும் ஜடேஜாவுக்காக அவரின் சகோதரி அதிகமாக உழைத்துள்ளார். ஜடேஜாவை தாய் போல் பார்த்து கொண்டுள்ளார். ஆனால் என்னை மட்டுமல்லாமல் அவரது சகோதரியையும் அவர் உதறி தள்ளியுள்ளார்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் ஜடேஜா நடத்தி வந்த ரெஸ்டாரண்டை தனது பெயருக்கு மாற வேண்டும் என்று ரிவாபா கூறினார். இதன்பின் ரிவாபா பொறுப்பேற்ற கொள்ள விரும்புகிறார் என்பதாக நினைத்து சகோதரி கையெழுத்திட்டார். அதேபோல் ரிவாபாவின் குடும்பத்தினர் ஒன்றும் பெரியளவில் தொழில்களை செய்யவில்லை. ரிவாபாவின் பெற்றோர் ஜடேஜாவுக்கு பரிசாக அளித்த அவ்டி கார் கூட ஜடேஜா சம்பாதித்த பணத்தில் வாங்கியது தான். ரிவாபா குடும்பத்தினர் ரயில்வே குடியிருப்பில் வசித்தவர்கள் தான்.
அவர் இப்போது ஜடேஜாவின் பணத்தின் மூலமாக ரூ.2 கோடிக்கு ஒரு பங்களாவை வாங்கி இருக்கிறார்கள். ஒருவேளை ஜடேஜாவுக்கு திருமணம் நடக்காமலோ அல்லது அவர் கிரிக்கெட் வீரராக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் ரவீந்திர ஜடேஜாவை சென்று பார்ப்பதில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. அவர் தான் எனக்கு மகன். நான் ஒன்றும் அவருக்கு மகன் அல்ல. என்னை தேடி வருவது அவரின் பொறுப்பு. இதனை நினைத்தால் தான் எனக்கு கவலையாக உள்ளது. ரக்ஷபந்தன் கொண்டாட்டத்தின் போது அவரின் சகோதரி கலங்கி போனதாக தெரிவித்துள்ளார்.