மும்பை: உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக எந்த வீரர் சரியாக இருப்பார் என்பது குறித்து சீனியர் வீரரான ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி தொடர்கள் என்றாலே அசுரத்தனமான ஃபார்மில் விளையாடும் ஷிகர் தவான், இந்திய அணியில் இருந்து கடந்த ஆண்டு முதலே புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ஆசிய போட்டிகளுக்கான அணியில் கூட ஷிகர் தவான் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாத ஷிகர் தவான், பேட்டிங் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக எந்த வீரர் சரியாக இருப்பார் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது இதுநாள் வரை உறுதி செய்யப்படாத நிலையில், ஆசியக் கோப்பையில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சீனியர் வீரரான ஷிகர் தவான் பேசுகையில், தற்போதைய இந்திய அணியில் அனுபவமும், இளமையும் கலந்து சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவில் நடப்பதால், நம் அணிக்கு சாதகமும் உள்ளது. எந்த மைதானம் எப்படி இருக்கும், எந்த பிட்ச் எப்படி செயல்படும் என்பது அனைத்தும் நன்றாக தெரியும்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசினார். அதேபோல் சுப்மன் கில்லின் ஆட்டத்தை பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது. உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்திய அணியின் நம்பர் 4 வீரராக சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் என்று விவாதித்து வருகின்றனர். என்னை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு போதுமான அளவிற்கான சர்வதேச அனுபவமும் உள்ளது. இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.