மும்பை: கிரிக்கெட்டர், வர்ணனையாளர்ம், பேட்டிங் பயிற்சியாளர் என்று பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் தினேஷ் கார்த்திக் செய்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின், ஆர்சிபி அணி உடனடியாக அவரை பேட்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது. இதனால் இனி தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஆட மாட்டார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென எஸ்ஏ20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பிரபல கிரிக்கெட் தளங்களுக்காக பிரத்யேக வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு வேறு ஒரு நட்சத்திரமாக வாழ வேண்டுமென்றால், யாராக வாழ்வதற்கு விரும்புகிறீர்கள் என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், ஒரு வாரத்திற்கு என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானாக வாழ ஆசைப்படுகிறேன். அவரின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். இதுவரை ஒருமுறை கூட அவரை நேரில் சந்தித்ததில்லை. அவர் மூளையில் எவ்வளவு புதுமைகளை உருவாக்குகிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.
அவர் ஒரு ஜீனியஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கன்சிஸ்டன்ட்டாக சிறந்த இசையை அளித்து வருகிறார். அதனால் அவரின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியாற்றுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதுதான் எனக்கு சவாலாக இருக்கும். ஆனாலும் அவர் மூளைக்குள் செல்ல வேண்டும் என்பதால், கவலையில்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய இசையமைப்பாளர்களில் அதிகமுறை தேசிய விருது வென்றவர் என்ற சாதனையை ஏ.ஆர்.ரஹ்மான் படைத்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருதை வென்றுள்ளார்.
இந்த சூழலில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தினேஷ் கார்த்திக்கின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. தமிழக வீரர்கள் பலருக்கும் ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க காரணமானவர்களில் முக்கியமானவர் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.