லக்னோ: சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசுவதற்கான அழுத்தத்தை எனக்கு நானே ஏற்படுத்தி கொண்டேன் இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார் சுப்மன் கில். டெங்கு காய்ச்சலால் உலகக்கோப்பை தொடரில் 2 போட்டிகளை தவறவிட்ட சுப்மன் கில், அதன்பின் களமிறங்கிய 3 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இன்னும் முழு திறமையையும் உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இதனால் விரைவில் சுப்மன் கில்லிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் ஒன்று வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். '

இந்த நிலையில் தனது பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணுகுமுறை குறித்து சுப்மன் கில் பேசுகையில், 3 அல்லது 4 இன்னிங்ஸ்களில் மோசமான விளையாடிவிட்டேன் என்பதால் உடனடியாக வலைப்பயிற்சியில் எனது ஆட்டத்தையோ அணுகுமுறையையோ மாற்ற வேண்டும் என்று அல்ல. அப்படி செய்தால் எனது ஆட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றாகிவிடும். என்னை பொறுத்தவரை 3 ஆட்டங்களில் சரியாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அடுத்த 3 போட்டிகளில் ரன்கள் குவிப்பேன் என்று நினைத்து கொள்வேன்.
அதுதான் என் மனநிலையாக இருக்கும். அனைத்து நேரங்களிலும் 3 போட்டிகளிலும் ரன்கள் சேர்க்க முடியாது. ஆனால் அனைத்து போட்டிகளிலும் ஒரு மனநிலையுடன் சென்று விளையாடினால் தான் ரன்கள் சேர்க்க முடியும். ஒவ்வொரு போட்டியையும் முதல் போட்டியை போலவே அணுக வேண்டும். சரியாக ரன்கள் சேர்க்க முடியவில்லை என்று அணுகுமுறையையும், மனநிலையையும் மாற்றிக் கொண்டால், அதிகமாக சொதப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஒவ்வொரு தொடரிலும் முதல் போட்டியில் என்ன மனநிலையுடன் விளையாடுகிறோமோ, அதே மனநிலையில் தான் கடைசி வரை விளையாட வேண்டும். காபா டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வாய்ப்பு கிடைத்ததை தவறவிட்ட பின், முதல் சதத்தை விளாச வேண்டும் என்று தீவிரமாக இருந்தேன். இதனால் எனக்கு நானே அழுத்தம் கொடுத்து கொண்டேன். ஏனென்றால் ஒரு சதத்தை விளாசிவிட்டால் அடுத்த என்ன நடக்கும் என்பதை நன்றாக அறிவேன். ஆனால் ஜிம்பாப்வே தொடரில் தான் சதம் அடிக்க முடிந்தது.
அதேபோல் சுப்மன் கில் என்ற வீரரின் 90 சதவிகித திறமையை தான் இதுவரை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். யாரும் 100 சதவிகித திறமையை கண்டதில்லை. அது வெறும் திறமை சார்ந்தது அல்ல. அதுவொரு வகையான மனநிலை என்று கூற வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு போட்டியின் பல்வேறு நிலையிலும் வெவ்வேறு வகையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.