
நாடு திரும்பும் விராட் கோலி
ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து வரும் 17ம் தேதி பகலிரவு போட்டியுடன் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. முதல் போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார்.

அஜிங்க்யா ரஹானே கேப்டன்
இதையடுத்து துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் ரஹானே மிகவும் அற்புதமான கேப்டன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது கேப்டன்ஷிப் ஆக்கிரமிப்பு வடிவிலானது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான கேப்டன்ஷிப்
கடந்த 2017ல் தர்மசாலாவில் நடைபெற்ற இந்தியா -ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் ரஹானேவின் அற்புதமான கேப்டன்ஷிப்பை தான் கண்டதாகவும் சாப்பல் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் கான்வர்ஷேசன் நிகழ்ச்சிக்காக ஊடகவியலாளர் ஆஷிஸ் ராயுடன் பேசிய அவர் அந்த போட்டியில் வார்னர் இந்திய பௌலர்களுக்கு சவால் கொடுத்த நிலையில் புதியவர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பளித்து அவரை வீழ்த்திய ரஹானேவின் செயலையும் பாராட்டினார்.

இந்தியாவிற்கு சாதகம்
மேலும் இந்தியாவின் சேஸிங்கின்போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், உடனடியாக களமிறங்கி விளையாடியதும் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தற்போதைய தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இல்லாததும் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











