சச்சினின் புத்தகத்தை படித்த ஆஃப்கான் வீரர்.. அஜய் ஜடேஜா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. நெகிழ்ந்த வீரர்கள்!
மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராஹிம் ஜர்தான் ஒரு முறை சச்சின் டெண்டுல்கர் புத்தகத்தை படித்த போதுதான், அவரை சச்சினை சந்திக்க ஏற்பாடு செய்ததாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை பொளந்து கட்டி அபார வெற்றியை பெற்றது. உலகக்கோப்பை தொடரில் 6வது இடத்தில் நிறைவு செய்ததன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதிபெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டதற்கு இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும் முக்கிய காரணம். ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் அஜய் ஜடேஜா ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டார். இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அஜய் ஜடேஜா கருத்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசுகையில், உலகக்கோப்பை ஆஃப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. எங்கள் காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படிதான் இப்போது ஆஃப்கானிஸ்தான் அணியை பார்க்கிறேன். அணியில் உள்ள வீரர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எந்த கருத்தையும் வெளிப்படையாக கூறுகிறார்கள்.
ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களில் மிகவும் வித்தியாசமான வீரர் இப்ராஹிம் ஜத்ரான். அவருக்கு தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கொண்டவர். ஒருமுறை ஜத்ரான் சச்சின் டெண்டுல்கர் தொடர்பான புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க அழைத்து வர முயற்சிக்கிறேன் என்று கூறினேன். அதேபோல் ஜானத்தன் ட்ராட் மிகச்சிறந்த பயிற்சியாளர். டைமிங், ஒழுக்கம், கட்டுப்பாடு என்று அனைத்திலும் தீவிரமாக இருப்பவர்.
அவர் கிரிக்கெட் களத்தை விட்டு சில காலம் வெளியில் இருந்தாலும், தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பயற்சியளிக்க ஜாம்பவான் வீரர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஜானத்தன் ட்ராட் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். நிச்சயம் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணம் என்று கூறினார். அஜய் ஜடேஜா சொல்லியதை போலவே மும்பை மைதானத்தில் நடந்த போட்டியின் போது சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து ஆஃப்கானிஸ்தான் வீரர்களை சந்திக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications