மும்பை: ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்துள்ள 50 சதங்கள் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஆடிய பாபர் அசாமின் ஆட்டம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று இந்திய ஜாம்பவான் கவுதம் கம்பீர் கூறியிருந்தார். ஆனால் கவுதம் கம்பீர் பெருமையாக பேசியதற்கு ஏற்ப, உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாமின் ஆட்டம் அமையவில்லை. 9 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 282 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், பாபர் அசாமை இந்திய ரசிகர்களிடம் கோர்த்துவிட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் சதங்கள் எண்ணிக்கையை விராட் கோலி முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால் கிரிக்கெட் உலகமே விராட் கோலியை கொண்டாடியது.
இதனிடையே விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் சதங்களின் எண்ணிக்கையை யாராலும் முறியடிக்க முடியாது என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளிலும் டாப் 3 வரிசையில் விளையாடும் எந்த வீரராலும் விராட் கோலி சாதனையை முறியடிக்க முடியும். நிச்சயம் மிடில் ஆர்டர் வீரர்களால் அவ்வளவு சதங்களை அடிக்க முடியாது.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் நம்பர் 3யில் விளையாடி வருகிறார். அவரால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியும். அதேபோல் இந்திய அணியில் சுப்மன் கில் தொடக்க வீரராக ஆடி வருகிறார். அவராலும் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 29 வயதாகும் பாபர் அசாம் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 19 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.