மும்பை: இந்திய அணியின் கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் செய்வது எளிதல்ல என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய மிக முக்கிய காரணம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். இந்திய அணியின் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எந்தவொரு சூழலிலும் களமிறங்கி ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பி வருகிறார்கள். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்களும், கேஎல் ராகுல் 102 ரன்களும் விளாசி அசத்தினர்.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 421 ரன்களையும், கேஎல் ராகுல் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 347 ரன்களையும் விளாசியுள்ளனர். குறிப்பாக கேஎல் ராகுல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டுகளை பெற்றது.
காயத்தில் இருந்து நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்கி கேஎல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். காயத்திற்கு முன் எப்போதும் மன உறுதி இல்லாமல் சந்தேகத்துடன் விளையாடும் கேஎல் ராகுலை ஒருமுறை கூட பார்க்க முடியவில்லை. இதனால் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் அபாயகரமான பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்துள்ளதோடு, பறிபோன துணை கேப்டன் பதவியையும் மீண்டும் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் கேஎல் ராகுலை பாராட்டி தள்ளியுள்ளார். இம்ரான் தாஹிர் பேசுகையில், காயத்திற்கு பின் கம்பேக் கொடுத்துள்ள கேஎல் ராகுல் பேட்டிங்கில் ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார் என்று நினைக்கிறேன். இதற்கு முன்பாக ஆடிய ஷாட்களில் கூட ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார். இதன் மூலம் கேஎல் ராகுல் முழுமையான வீரராக மாறி இருக்கிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் ஆடிய ஷாட்கள் மிரட்டலாக இருந்தது. அதிலும் பார்க்காமலேயே அடிக்க அந்த ஷாட் வேற லெவலில் இருந்தது. ஒவ்வொரு பந்தையும் பேட்டின் மிடில் பகுதியில் விளாசி தள்ளுகிறார். கேஎல் ராகுலை போன்ற வீரர்களுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் செய்வது சாதாரண விஷயமல்ல. ஏனென்றால் கேஎல் ராகுலிடம் கட் ஷாட் இருக்கிறார். அவரால் மிட் ஆன், மிட் ஆஃப் மற்றும் மிட் விக்கெட் திசையில் எளிதாக ஷாட்களை அடிக்க முடியும். அதேபோல் ஸ்கூப் ஷாட்களை ஆட கூடியவர்.
வழக்கமாக களமிறங்கிய பின் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி பின் அதிரடிக்கு மாறக் கூடியவர். ஆனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே அதிரடிதான். இதன் மூலம் டாப் ஆர்டர் வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய மிடில் ஆர்டர் வீரர்கள் அதிரடியை மிரட்ட தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறினார்.