பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அரையிறுதிக்கு முன்னேறும் 3 அணிகள் தங்களின் இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், 4வது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதி சுற்றில் 4வது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் விளையாட நேற்று முன்தினமே இந்திய அணி வீரர்கள் பெங்களூரு வந்தனர். இன்று நடைபெற்ற வீரர்களுக்கான பயிற்சியில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதேபோல் ரோகித் சர்மா மைதானத்திற்கு வந்தாலும் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பயிற்சிக்கு வரவில்லை.

இதனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முகமது சிராஜ், பும்ரா இருவருக்கும் ஓய்வு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரசித் கிருஷ்ணா ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அவருக்கு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்பட்ட நிலையில், சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகம் செய்யவுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.