மும்பை: நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வேண்டுமென்றே ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயர்களை இணைத்து பெயர் வைக்கவில்லை என்று அவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வீரராக மாறியுள்ளார். நியூசிலாந்து அணியின் அடுத்த சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ள ரச்சின் ரவீந்திரா, இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 சதங்கள், 2 அரைசதங்கள் என்று 565 ரன்களை விளாசியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரரான ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக களமிறங்கி அசத்தி வருகிறார். இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இப்போதே ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் ரச்சின் ரவீந்திராவை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே அணிகள் ஒப்பந்தம் செய்யும் என்று கணிக்க தொடங்கிவிட்டனர்.
இதனிடையே ரச்சின் ரவீந்திராவுக்கு அவரது பெற்றோர் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களை இணைத்து அவருக்கு பெயர் வைத்தாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களும் ரச்சினுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இதனிடையே பெங்களூருவில் உள்ள அவரின் பாட்டி வீட்டிற்கு ரச்சின் ரவீந்திரா அண்மையில் சென்றார்.
இந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவின் உண்மையான பெயர்க்காரணம் குறித்து அவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ரச்சின் பிறந்த போது எனது மனைவி சொன்ன பெயர் தான் ரச்சின். அந்த பெயர் கேட்பதற்கு நன்றாகவும், சொல்வதற்கு எளிதாகவும், சிறிய பெயராகவும் இருந்தது. அதனால் அவருக்கு பெயர் வைக்க அதிகமாக எந்த விவாதமோ, ஆலோசனையோ செய்யவில்லை. அதே பெயரை வைத்துவிட்டோம்.
அதன்பின் சில ஆண்டுகள் கடந்த போதுதான், ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயர்களை இணைத்து நாங்கள் சிந்தித்துள்ளோம் என்பதே தெரிந்தது. அதேபோல் அவரை கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டும் என்று எந்த சிந்தனையும் எங்களிடம் இருந்ததில்லை. ஒரு சாதாரண பெற்றோராக அவரின் விருப்பத்திற்கு விட்டுவிட்டோம். அவர் கிரிக்கெட்டை தேர்வு செய்த போது, முழு மனதுடன் நாங்கள் அவருக்கு ஆதரவளித்தோம். நிச்சயம் அவர் பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்த்தோம். தற்போது அவர் லட்சியத்தை எட்டிவிட்டார் என்று தெரிவித்தார்.