துபாய் : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடைபெறும் இந்த தொடரின் முடிவில் யார் அதிக புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடம் பிடிக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
இந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தொடரில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இதேபோன்று இந்திய அணி வெளிநாட்டு மண்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது.

உள்ளூர் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அந்நிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்றுவிடலாம். ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்திய அணி வீழ்த்தினாலோ, டிரா செய்தாலோ அடுத்த முறையும் இந்தியா பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை ஆஸ்திரேலிய எதிர்கொள்ளும். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ,இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இந்தியா,பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த முறையும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதவில்லை. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசம் ஆகிய அணியையும், அந்நிய மண்ணில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா இலங்கை ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது. தென்னாபிரிக்காவை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும் நியூசிலாந்து ,வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளை வெளிநாடுகளிலும் எதிர்கொள்ள இருக்கிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சொந்த மண்ணிலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகளை வெளிநாட்டு மண்ணிலும் எதிர் கொள்ள உள்ளது. இந்த அட்டவணைகளிலே இந்தியாவுக்கு தான் கொஞ்சம் எளிதான போட்டிகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.