வரி பிடித்தம்
2016 உலக டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்றது. தொடரை நடத்திய பிசிசிஐ மற்றும் ஒளிபரப்பிய ஸ்டார் டிவி ஆகியோர் ஐசிசி-க்கு ஒளிபரப்பு உரிமத்திற்கான தொகையை செலுத்தினர். அப்போது இந்திய சட்டப்படி வரி பிடித்துக் கொண்டு மீதத் தொகையை மட்டுமே செலுத்தியுள்ளனர்.
161 கோடி வேண்டும்
ஐசிசி-க்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தருவார்கள் என ஐசிசி காத்திருந்த நிலையில், அது நடக்கவில்லை. அதனால் வரிக்காக பிடித்த சுமார் 161 கோடி ரூபாயை டிசம்பர் 31, 2018க்குள் பிசிசிஐ செலுத்த வேண்டும் என ஐசிசி கூறியுள்ளது.
மிரட்டல் கெடு
இதில் கெடு என்ன என்பது தான் சுவாரஸ்யம். குறிப்பிட்ட தேதிக்குள் மீதத் தொகையை செலுத்தாவிட்டால் அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள 2021 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2023 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் இந்தியாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றி விடுவோம் என மிரட்டல் கெடு விதித்துள்ளது.
நாங்களே எடுத்துக் கொள்வோம்
மேலும், இந்த தொகையை செலுத்தாவிட்டால் அடுத்து பிசிசிஐக்கு, வழங்கவேண்டிய தொகைகளில் இருந்து எடுத்துக் கொள்வோம் எனவும் அறிவித்துள்ளது ஐசிசி. பிசிசிஐ தான் கிரிக்கெட் ஆடும் நாடுகளிலேயே பணக்கார நாடு. ஐசிசியின் வருமானத்தில் பெரும் பகுதி இந்தியாவில் இருந்து தான் வருகிறது என்றும் கூட சொல்லலாம். அப்படி இருந்தும் ஐசிசி பயங்கர கெத்து காட்டி கெடு விதித்துள்ளது.
கொடுக்க முடியாது
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் ஐசிசி-க்கு இப்போது தலைவராக இருப்பது பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ஷஷான்க் மனோகர். டிசம்பர் 31க்கு இன்னும் பத்து நாட்களே மீதமுள்ள நிலையில், தற்போது பிசிசிஐ-யை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டியினர், இந்த தொகையை செலுத்தப் போவதில்லை எனவும் இதை நீதிமன்றத்தில் வைத்து தீர்த்துக் கொள்வோம் என கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.