மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் தொடங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என இந்திய நிர்வாகம் பி சி சி ஐ க்கு கோரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் எதிர்கொள்ளும் போது ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதே இந்தியா போட்டு வைத்த திட்டமாகும். தற்போது இதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஐசிசி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 10 மைதானங்களில் ஆடுகளப் பராமரிப்பாளர்களுடன் ஐசிசியின் தலைமை ஆடுகள பராமரிப்பு ஆலோசகர் ஆண்டி அடிங்சன் ஒரு ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
அதில் வரும் உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை தான் பராமரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதமாக இருக்கும் வகையில் ஆடுகளம் இருக்கக் கூடாது என்றும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் ரன்கள் அதிகம் வரும் வகையிலும் பிட்ச் அமைக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
60% பேட்ஸ்மேனுக்கும் 40% பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் ஒவ்வொருவரும் ஆடுகளத்தை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பவுண்டரி லைனில் இருக்கும் வெளிப்புற ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பந்து வேகமாக பவுண்டரி லைனுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரில் பவுண்டரி லைன்கள் மிகவும் குறைவான தூரத்தில் இருந்தது. ஆனால் இம்முறை 70 முதல் 80 யாரு தூரம் தான் இருக்க வேண்டும் என்றும் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் மைதானங்களை முழுமையாக மூட போதிய தார்பாய்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது.