சென்னை : சர்வதேச t20 கிரிக்கெட்டில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங் மகத்தான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
இந்த நிலையில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு ஒரு பெரிய கவுரவத்தை ஐசிசி வழங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதை ஐசிசி வழங்கும்.

அந்த பகுதியில் 2024 ஆம் ஆண்டு பொறுத்தவரை சர்வதேச டி20 கிரிக்கெட் சிறந்த வீரர்களுக்கான விருதை ஆர்ஸ்தீப் சிங் பெற்றிருக்கிறார். 25 வயதான ஆர்ஸ்தீப் சிங் 2024 ஆம் ஆண்டு 18 போட்டிகள் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆர்ஸ்தீப் சிங் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தார்.
ஹாங்காங் வீரர் ஈஷா கான் 46 விக்கெட்களுடன் முதல் இடத்திலும், ஜூனைத் சித்திக் 40 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கையைச் சேர்ந்த ஹசரங்கா 38 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், சவுதி அரேபியாவை சேர்ந்த உஸ்மான் நஜீப் 38 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்திலும் இருந்த நிலையில் ஆர்ஸ்தீப் இந்த விருதை பெற்றிருக்கிறார்.
மற்றவர்களை விட பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடி ஆர்ஸ்தீப் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்ஸ்தீப் முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி உடன் சேர்ந்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் அமெரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்ஸ்தீப் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த விருது மட்டுமில்லாமல் ஐசிசி 2024 ஆம் ஆண்டில் சிறந்த டி20 அணியிலும் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருடன் ஆர்ஸ்தீப் சிங்கும் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.