துபாய் : ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சிறந்த அறிமுக வீரருக்கான விருதை நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3 வடிவங்களுக்கும் சேர்த்து சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த அறிமுக வீரர்களுக்கான விருது என்று பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்படும். அதற்கான பரிந்துரை பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.

அதில் சிறந்த அறிமுக வீரருக்கான விருதின் பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் ஜெரால்ட் கோட்சியே மற்றும் இலங்கை அணியின் இளம் வீரர் மதுஷங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து ரசிகர்களிடையே வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிறந்த அறிமுக வீரருக்கான ஐசிசி விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால், மதுஷங்கா, கோட்சியே ஆகியோரை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மட்டும் 3 சதங்கள், 3 அரைசதம் என்று 578 ரன்களை குவித்தார்.
அதேபோல் கடந்த ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 820 ரன்கள் மற்றும் 18 விக்கெட்டுகள் என்றும், டி20 கிரிக்கெட்டில் 91 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் என்று மொத்தமாக 911 ரன்கள் மற்றும் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக அசத்தியுள்ளார். மற்ற வீரர்களை ஒப்பிடும் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ரச்சின் ரவீந்திராவின் பங்கு அதிகமாகவும் இருந்துள்ளது.
ஐசிசி விருதை வென்றுள்ள மகிழ்ச்சியில் ரச்சின் ரவீந்திரா பேசுகையில், ஐசிசி விருதை வென்றது ஸ்பெஷலான உணர்வு தான். ஏனென்றால் ஐசிசி போன்ற உச்ச மையங்களால் நமது ஆட்டம் பாராட்டப்படுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த ஆண்டு மிகச்சிறந்த பயணமாக அமைந்தது. பல்வேறு சவாலான சூழல்களில் அதிகளவிலான கிரிக்கெட்டை விளையாட வாய்ப்பு பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் வாழ்த்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.