டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐசிசியின் நிர்வாகிகள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுதினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஐசிசி நிர்வாகிகள் ஆலோனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டின் இறுதியில் மற்றும் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விளையாட்டுத்துறை. அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், விளையாட்டுத்துறையினர் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலில் சக்கரங்களை கட்டிக் கொண்டு சர்வதேச அளவில் இந்த நாட்டிற்கும் அந்த நாட்டிற்கும் பறந்து கொண்டிருந்த விளையாட்டு வீரர்கள் வீட்டில் மனைவிக்கு துணி துவைத்துக் கொண்டுள்ளனர் (உபயம் -ஷிகர் தவான்).
விளையாட்டுத்துறையில் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கால்பந்து போட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தானில் லீக் போட்டிகள், கால்பந்து தொடர்கள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐசிசியும் சர்வதேச அளவில் எந்த விஷயத்தையும் அறிவிக்க முடியாமல் அல்லது செயல்படுத்த முடியாமல் முடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் நடைபெறவிருந்த ஐசிசி நிர்வாகிகள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சர்வதேச அளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து தன்னுடைய உறுப்பு நாடுகளுடன் விவாதிக்க உள்ளது ஐசிசி.
இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஐசிசி டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஆனால் இவைகுறித்த எந்தவிதமான முடிவும் வரும் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் எடுக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் எடுக்கப்பட கூடிய முடிவு மற்றும் பி மற்றும் சி முடிவுகள் அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சூழ்நிலை மோசமடையும் போது அவை செயல்படுத்தப்படும் என்றும் ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்றவற்றிற்கு இன்னும் அதிககாலம் உள்ளதால் நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படாது என்றும் நிதி நிலைமை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.