லாகூர்: 2026 டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான குரூப் 'ஏ' ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 15 அன்று கொழும்புவில் நடக்கவிருந்த இந்தப் போட்டி, பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின்படி விளையாடப்படாது என தெரியவந்துள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவரான எஹ்சான் மணி, இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அரசு உத்தரவுகளைப் பின்பற்றிய பாகிஸ்தானைத் தண்டிக்க ஐ.சி.சி.க்கு அதிகாரம் இல்லை என்று அவர் திட்டசட்டமாக கூறியுள்ளார்.

ஐசிசியின் இப்போதைய நிலைப்பாடு இரட்டைத் தரத்தைக் காட்டுவதாக எஹ்சான் மணி குற்றம்சாட்டினார். 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் ஆட இந்தியா மறுத்ததைச் சுட்டிக்காட்டி, ஒரு நாட்டுக்கு ஒரு நீதி என இரட்டை நீதி சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "அரசு உத்தரவுகளை பாகிஸ்தான் பின்பற்றினால், எந்தத் தடையும் விதிக்க முடியாது. பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை ஆட இந்தியா மறுத்ததன் அடிப்படையே இதுதான். இரட்டை நிலைப்பாடு கூடாது. பிரச்சனையைச் சமாளிக்காமல், ஐசிசி. ஒரு பார்வையாளராகவே நின்றது துரதிர்ஷ்டவசமானது," என்றார்.
இந்த சூழலில் ஐசிசி விடுத்துள்ள எச்சரிக்கைகளை பாகிஸ்தான் மீண்டும் நிராகரித்துள்ளது. "பிப்ரவரி 15 அன்று இந்திய அணியுடன் விளையாடக் கூடாது. நாக் அவுட் சுற்றில் இந்தியாவை எதிர்கொண்டாலும், அரசு எடுக்கும் முடிவையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்பற்றும். என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் தங்கள் அரசின் முடிவை, ஐ.சி.சி.க்கு திங்கள்கிழமை அறிவிக்க பி.சி.பி. முடிவெடுத்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்று ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது.