மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஊடகங்களில் ஜெய் ஷா குறித்து வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்ளே மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் ஒதுங்கியதன் பின்னணியில் ஜெய்ஷா அழுத்தம் கொடுத்து இருக்கிறார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அதை சுட்டிக் காட்டி இருக்கும் சுனில் கவாஸ்கர் அப்படி என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் அந்த நாடுகளின் உறுப்பினர்கள் ஏன் எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் சக்திகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியில் இல்லை என்றால் மட்டும்தான் ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகின்றன எனவும் அவர் சாடி இருக்கிறார். இது பற்றி சுனில் கவாஸ்கர் கூறியதாவது -
"அனைத்து வாய்ப்புகளையும் வைத்து பார்க்கும் போது ஜெய் ஷா தான் அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆகப் போகிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு எப்படி அவர் நன்மை செய்தாரோ, அதேபோல ஆடவர் அணி, மகளிர் அணி என உலகம் முழுவதும் உள்ள வீரர்களுக்கு அவர் நன்மை செய்வார். கிரெக் பார்க்ளே, தான் மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என அறிவித்தவுடன் வெளிநாட்டு ஊடகங்கள் ஜெய் ஷா அழுத்தம் கொடுத்ததால் தான் பார்க்ளே இந்த முடிவை எடுத்தார் என செய்திகள் வெளியிட்டு இருந்தன."
"சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் முன்னாள் சக்திகளை சேர்ந்தவர்கள் இருக்கும்போது, அவர்களது செயல்பாடு குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் உடனடியாக அவர்கள் இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். பார்க்ளே மூன்றாவது முறையாக போட்டியிடக் கூடாது என யாராவது அவருக்கு அழுத்தம் கொடுத்து இருந்தால், அது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் அந்த நாடுகள் கேள்வி எழுப்பி இருக்கலாமே."
"அந்தக் கூட்டத்தில் அவர்கள் என்ன செய்தார்கள்? அதற்கு எதிர்ப்பு கொடுத்து நீங்கள் கேள்வி எழுப்பிருக்கலாமே. அப்படி யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்றால் எதற்காக தேவை இன்றி வேறு ஒருவரை கை காட்டுகிறீர்கள். இதற்குப் பெயர்தான் "டால் பாப்பி சிண்ட்ரோம்" (புகழ்பெற்றவர் மீது குற்றம் சுமத்துதல்) அல்லது கிரிக்கெட் விளையாட்டை நாம் மட்டுமே நிர்வகிக்கவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுதல். அதுதான் இங்கே நடந்திருக்கிறது." என்றார் சுனில் கவாஸ்கர்.