
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி
2025ம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ஐ.சி.சி நடத்தும் தொடரானது நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தானில் நிலவி வரும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கு பல ஆண்டுகளாக அயல்நாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் பொதுவானதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் தொடர்கள் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் குழப்பம்
தற்போது தான் சில அயல்நாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல முன்வந்துள்ளன. ஆனால் சமீபத்தில் கூட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக கூறி சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இந்த சூழலில் தான் தற்போது மீண்டும் அங்கு ஐசிசி தொடரை நடத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அயல்நாட்டு அணிகளை விட, பரம எதிரியான இந்திய அணி அங்கு செல்லுமா என்ற கேள்வி தான் அனைவரின் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி தலைவர் பதில்
இந்நிலையில் இதுகுறித்து ஐசிசி நிர்வாக தலைவர் க்ரேக் பார்க்லே பேசியுள்ளார். அதில் அவர், 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் பாகிஸ்தானில் தான் நடக்கும். அங்கு பல ஆண்டுகள் கழித்து ஐ.சி.சி போட்டிகள் நடைபெறுவதால் நிச்சயம் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த தொடரானது நடைபெறும் என்று நம்புகிறோம். பாகிஸ்தானில் தொடரை நடத்த முடியுமா என்பதை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. நிச்சயமாக நடத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் அந்த தொடரில் அனைத்து அணிகளும் பங்கேற்கும்.

இந்தியாவின் நிலைமை
இந்தியா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக தான் இருக்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஐசிசி அமைப்பால் கட்டுப்படுத்த முடியாது. என்னைப்பொறுத்தவரை விளையாட்டின் மூலம் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த முடியும். அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் விஷயமாக விளையாட்டு திகழ்கிறது. அந்தவகையில் சாம்பியன்ஸ் டிராபி உதவுமானால், அதில் அனைவருக்கும் நன்மை தானே, என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சிக்கல்
க்ரேக் பார்க்லே கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது, நிச்சயம் பாகிஸ்தானுக்கு அனைத்து அணிகளும் வர வேண்டும் எனபதில் ஐசிசி தீவிரமாக இருப்பது தெரிகிறது. அதன்படி இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடியாக வேண்டும். அப்படி விளையாடாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறினால், ஐசிசி தொடரில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications