லண்டன்: மழை காரணமாக ஆஸ்திரேலியா, வங்கதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் மோதின.
ஆஸ்திரேலிய அணியில் ஜான் ஹேஸ்டிங்ஸ்க்கு பதிலாக, ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல,வங்கதேச அணியில் மெஹாதி ஹாசன் இடம் பிடித்தார்.
டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்கதேசம் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 95 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க் 4, சம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது. தொடக்க வீரர் பின்ச் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், வந்த கேப்டன் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மழை குறுக்கீடு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான இலக்கு 43 ஓவர்களில் 89 ரன்களாக குறைக்கப்பட்டது. ஆனால், இரு வீரர்களும் களமிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன் மீண்டும் தூரல் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா தரப்பில் வார்னர் 40, ஸ்மித் 22 ரன்கள் எடுத்திருந்தனர். ஜூன் 2 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது