கார்டிப்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நியூசிலாந்தும் இங்கிலாந்து அணியும் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடியை பிரித்தார் மில்னே. அவரது பந்துவீச்சில் ராஜ் (13) போல்டாகி வெளியேறினார். அதன்பின்னர் ஹேல்ஸ், ரூட் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.
ஹேல்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில், மில்னே பந்தில் போல்டானார். கேப்டன் மோர்கன் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட், 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். அப்போது அணியின் ஸ்கோர் 210 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பட்லர் மட்டும் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். இதனால், 49.3 ஓவர்களில் இங்கிலாந்து 310 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பட்லர் 61 ரன்களுடன் களத்திலிருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் மில்னே, ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். சவுத்தி 2 விக்கெட்டும், போல்ட், சான்ட்னெர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 311 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் மட்டும் எடுத்தது.
இதனால் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 87 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் பிளென்கட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.