மும்பை : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஒரு புதிய முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது. மினி உலக கோப்பை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடித்திருக்கும் அணி இந்த தொடரில் பங்கேற்கும்.
2013 ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை இந்த தொடரில் கைப்பற்றிய நிலையில் 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது. அதன் பிறகு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஏழு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் மீண்டும் இந்த மினி உலக கோப்பையை ஐசிசி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை நிலைநிறுத்த ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் பட்சத்தில் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள லாகூர் நகரத்தில் நடத்த ஐசிசி முடிவு செய்தது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு வரப்போவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ஐசிசிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் ஆசிய கோப்பை தொடர் போல் ஹைபிரிட் மாடல் முறையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது. அதன்படி இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் துபாய் அல்லது இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.
ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் பைனலையும் பாகிஸ்தானுக்கு பதிலாக வெளிநாட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானில் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறது. பல வெளிநாட்டு வீரர்கள் வெளிநாடு அணி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் கூட தற்போது பாகிஸ்தானுக்கு வருகின்றன. இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு பாகிஸ்தானில் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரும் நடைபெறுகிறது.
இதனால் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆசிய கோப்பை ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டதற்கு காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் ஜெய்ஷா முக்கிய பதவியில் இருந்தார். ஆனால் ஐசிசி இந்தியாவின் பேச்சை கேட்குமா? இல்லை இந்த தொடரை விட்டு இந்தியா வெளியேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.