துபாய் : சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடரை பாகிஸ்தான் நடத்துவதில் ஏற்பட்ட குழப்பம் தற்போது தீர்ந்து இருக்கிறது. பாகிஸ்தான் வந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தது.
தங்களுக்கு ஹைபிரிட் முறைப்படி போட்டியை நடத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. மாறாக தாங்களும் பதிலுக்கு இனி இந்தியா வந்து எந்த ஒரு தொடரிலும் விளையாட மாட்டோம் என்றும் இனி ஹைபிரிட் மாடல் படி தான் நாங்களும் விளையாடுவோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவுக்கும் பிரச்சினையை கிளப்பியது. இந்த நிலையில் இரண்டு நாடு கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி உடன் ஆலோசனை நடத்தியதில் தற்போது முடிவு எட்டப்பட்டு விட்டது. அதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி ஹைபிரிட் மாடல் முறைப்படி பங்கேற்க பாகிஸ்தான் ஒப்பு கொண்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் 2024 ஆம் ஆண்டிலிருந்து 2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நடத்தும் தொடரில் இரு அணிகளும் ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் விளையாடப் போகிறது. அதாவது 2025 மகளிர் உலகக் கோப்பை 2026 டி20 உலக கோப்பை ஆகிய தொடரை இந்தியா நடத்தப் போகிறது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் விளையாடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தீர்வுக்கு வந்துள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் மற்றும் மேலும் ஒரு அணி இணைந்து முத்தரப்பு தொடரையும் நடத்த ஐசிசி கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த தொடரும் ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் நடைபெறும் என தெரிகிறது. இந்த நிலையில் வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டியை எங்கு நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் துபாய் முதலிடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும் இருக்கிறது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.