மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான அட்டவணை நாளை திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் இதனால் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்தினால் தங்களால் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டுக்கு நடத்த ஐசிசி முடிவெடுத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத புது டிவிஸ்ட் ஒன்று நடந்திருக்கிறது. அதில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படாமல் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி வேறு நாட்டில் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஐசிசி நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் மட்டுமே விளம்பரம் மூலம் லாபத்தை பெற முடியும். மேலும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி இருக்கும் நிறுவனங்களும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நம்பியே இருக்கிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகப் போகிறோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருப்பது ஐசிசிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னும் மூன்று மாதங்களில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மாறி மாறி தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி சாம்பியன்ஸ் கோப்பைத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு வந்திருந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.