மும்பை : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெற்றால் தாங்கள் வந்து விளையாட மாட்டோம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் தாங்கள் விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வெளிநாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒருவேளை ஹைபிரிட் மாடல் படி இந்த போட்டி நடைபெற்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தாங்கள் நடத்தப் போவதில்லை என்றும் அந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.
இதன் முடிவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பு குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் செய்தியாளரிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி, நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது சிறந்ததோ அதையே நான் செய்வேன் என்ற உறுதியை அளிக்கின்றேன்.
ஐசிசி தலைவருடன் நானும் எங்களது குழுவும் தொடர்பில் இருக்கின்றோம். பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், இனி ஒருபோதும் இந்தியாவுக்கு வந்து நாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடாகும்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்து எங்களுடைய முடிவை நாங்கள் அறிவிப்போம் என்று ஐசிசி இடம் நான் தெரிவித்து இருக்கின்றேன். இந்திய அணி தங்களுடைய கோரிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக எங்களிடம் அறிவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதையும் இதுவரை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியா தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்லவில்லை என்றால் இனி நாங்கள் இந்தியாவுக்கே வரமாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருப்பது தற்போது பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2025 மகளிர் உலகக் கோப்பை, 2026 டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து பெரிய தொடர் இந்தியாவின் நடைபெற உள்ள நிலையில், அதற்கு பாகிஸ்தான் வரவில்லை என்றால் அது மிகப்பெரிய இழப்பை பிசிசிஐ க்கும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.