இஸ்லாமாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளதால், இந்திய அணி அங்கு பயணித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்குமா என்ற கேள்விகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட, மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பில் ஐசிசி நிர்வாகத்திற்கு தங்களின் விளக்க கடிதத்தை அனுப்பியது. அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தவும் பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஆசியக் கோப்பையை போல் இம்முறை ஹைபிரிட் மாடல் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தீவிரமாக இருந்தனர்.
இதன் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை கூட வெளியிட முடியவில்லை. இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில், எப்படி பிசிசிஐ மற்றும் பிசிபி நிர்வாகங்களை சமாளிப்பது என்று தெரியாமல் ஐசிசி திணறி வந்தது. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ உட்பட அனைத்து நாடுகளின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. பாகிஸ்தான் நிர்வாகிகள் தரப்பில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த கூடாது என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நிர்வாகத்தை தவிர்த்து மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தரப்பில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த ஒப்புக் கொண்டதாக தெரிய வந்தது.
இதன்பின் ஐசிசி தரப்பில், பாகிஸ்தான் நிர்வாகம் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், சாம்பியன்ஸ் டிராபியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் உருவாகும் என்று எச்சரித்ததாக கூறப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவில்லை என்றால், பிசிபி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.550 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும்.
இந்த நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் நிர்வாகம் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு முன்னாள் வீரர் ரஷீத் லடீஃப் தெரிவித்துள்ளார். இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டிகளும் துபாயில் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பிசிசிஐ-யின் பிடிவாதத்திற்கு பணிந்துவிட்டதாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இன்னும் 3 நாட்களில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு பிசிபி தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.