
ரோஹித் 78 ரன்கள்
ரோஹித் ஷர்மாவும் ஷிகார் தவானும் நிலைத்து நின்று ரன்களைக் குவித்து வந்தனர். 24.5வது ஓவரில் இந்திய அணி 138 ரன்களைக் குவித்த நிலையில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். அப்போது ரோஹித் ஷர்மா 78 ரன்களை எடுத்திருந்தார்.

நிலைக்காத கோஹ்லி
ஷிகார் தவானுடன் கை கோர்த்த கேப்டன் கோஹ்லி நிலைக்கவில்லை 25.5 வது ஓவரில் கோஹ்லி அவுட் ஆனார். 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என்ற நிலையில் யுவராஜ் சிங் களத்துக்கு வந்தார்.

சோபிக்காத யுவி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் இன்றைய போட்டியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் யுவராஜ்சிங் இன்று சோபிக்கவில்லை. 33.3-வது ஓவரில் யுவி அடித்த பந்தே ஸ்டம்பை பதம் பார்க்க அவுட் ஆகி வெளியேறிவிட்டார்.

சதமடித்த தவான்
இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பின்னர் டோணியும் தவானும் கைகோர்த்து விளையாடினர். 40-வது ஓவரில் ஷிகார் தவான் சதமடித்து அசத்தினார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்திருந்தது.

தவான் 125 ரன்கள்
இதன் பின்னர் தவான் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவருடன் டோணியுடன் அற்புதமாக விளையாடினார். 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகார் தவான் அவுட் ஆனார். இந்திய அணி 45 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களை எட்டியது.

நடையை கட்டிய பாண்ட்யா
அப்போது டோணியுடன் பாண்ட்யா கை கோர்த்தார். பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவரில் வெளுத்து கட்டிய பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் அதிரடியை தொடங்கிய வேகத்திலேயே நடையைக் கட்டினார். 45.4வது ஓவரில் 9 ரன்கள்தான் எடுத்திருந்த நிலையில் பாண்ட்யா அவுட் ஆனார்.

டோணி அவுட்
அப்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து பந்துகளை பவுண்டரிகளாக, சிக்சர்களாக தெறிக்கவிட்டார் டோணி. மறுமுனையில் ஜாதவும் அடித்து விளையாடினார். 49.2வது ஓவரில் 52 பந்துகளில் 63 ரன்களைக் குவித்த நிலையில் டோணி அவுட் ஆனார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்திருந்தது.

50 ஓவரில் 321 ரன்கள்
பின்னர் களத்தில் இருந்த ஜாதவுடன் ஜடேஜா கை கோர்த்தார். இலங்கையின் பந்துகளை ஜாதவ் அதிரடியாக துவம்சம் செய்தார். 13 பந்துகளில் 25 ரன்களைக் குவித்து அதகளப்படுத்தினார் ஜாதவ். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களைக் குவித்தது. இலங்கை வெல்ல 322 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மலிங்க 2 விக்கெட்டுகள்
இலங்கையின் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் லக்மல், பெர்னாண்டோ, பெரேரா, குணரத்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலங்கையின் தொடக்க வீரர்களாக டிக்வெல்லவும் குணதிலக்கேவும் களமிறங்கினர். 4.4 வது ஓவரில் இலங்கை அணி 11 ரன்கள் எடுத்த நிலையில் டிக்வெல்ல அவுட் ஆனார். களத்தில் இருந்த குணதிலகேவுடன் மெண்டிஸ் கை கோர்த்தார்.

படாதபாடுபட்ட இந்திய வீரர்கள்
இந்த ஜோடி நிலைத்து நின்று ரன்களை குவித்து வந்தது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணி வீரர்கள் படாதபாடு பட்டனர். 27.5வது ஓவரில் இலங்கை 170 ரன்கள் எடுத்த நிலையில் குணதிலகே ரன் அவுட் ஆனார். அவர் 72 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் மெண்டிஸும் பெரேராவும் இணைந்து அதகளப்படுத்தினர். 44 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பெரேரா பெவிலியனுக்குத் திரும்பினார்.

அசத்திய மேத்யூஸ்- குணரத்னே ஜோடி
இதனைத் தொடர்ந்து மெண்டிஸும் மேத்யூஸும் களமாடினர். மெண்டிஸ் 93 பந்துகளில் 89 ரன்களை எட்டிய நிலையில் ரன் அவுட் ஆனார். மேத்யூஸுடன் குணரத்னே சேர்ந்து கொள்ள ஆட்டத்தின் போக்கே திசைமாறிப் போனது. இருவரும் ஆடிய ஆட்டத்தில் இந்தியாவின் தோல்வி உறுதியாகிப் போனது. இலங்கையின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடினர். இந்திய அணியின் பந்துகளை பந்தாடினர். 48.4-வது ஓவரில் வெற்றி இலக்கான 322 ரன்களை 3 விக்கெட்டுகள் இழப்பில் எட்டி வெற்றி பெற்றது இலங்கை.

மோசமான பந்து வீச்சு
இந்திய வீரர் ஜடேஜா 6 ஓவர்கள் மட்டுமே வீசி 52 ரன்களை அள்ளி கொடுத்தார். பாண்ட்யா 7 ஓவர்கள் வீசி 51 ரன்களைக் கொடுத்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இந்திய பந்துவீச்சு மோசமாக இருந்ததால் இலங்கை எளிதாக வென்றது.


Click it and Unblock the Notifications











