லண்டன்: சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) ஒருநாள் போட்டிகளில் முக்கிய விதியை மாற்றி அமைத்திருக்கிறது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதாவது, ஒவ்வொரு முனையிலிருந்தும் பந்து வீசும் போது வெவ்வேறு பந்துகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.
அதன்படி முதல் ஓவரிலிருந்து கடைசி ஓவர் வரை இரண்டு பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் ஒரு பந்து ஒரு இன்னிங்ஸில் 25 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு இருக்கும். ஒரு முழு போட்டியில் மொத்தம் நான்கு பந்துகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

தற்போது அந்த விதியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி ஒரு இன்னிங்ஸில் முதல் 34 ஓவர்கள் வரை மட்டுமே இரண்டு வெவ்வேறு பந்துகள் பயன்படுத்தப்படும். அதன் பிறகு உள்ள 16 ஓவர்களுக்கு ஒரே பந்துதான் பயன்படுத்தப்படும். முதல் 34 ஓவர்கள் வீசப்பட்ட இரண்டு பந்துகளில், ஒரு பந்து மட்டும் கடைசி 16 ஓவர்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்படும்.
அதன்படி ஒரு பந்து 17 ஓவர்கள் வரை மட்டுமே வீசப்பட்டிருக்கும்; மற்றொரு பந்து 33 ஓவர்கள் வீசப்பட்டிருக்கும். இதன் மூலம் கடைசி ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு ஏற்றவாறு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலத்தில் பந்து வீச்சாளர்களுக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் சாதகமான அம்சங்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இந்த விதிமுறையை அமல்படுத்தி உள்ளது. இந்த விதி ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2 முதல் அமல்படுத்தப்படும்.
மேலும், டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் கன்கஷன் சப்ஸ்டிட்யூட் (Concussion Substitute) குறித்த விதிமுறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு மீதமுள்ள போட்டியில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்கு இணையான ஒரு வீரரை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேட்ச் ரெஃபரி அதற்கான அனுமதி அளித்தால் அவர் விளையாடலாம் என்ற நிலை இருந்தது. இது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்தது. ஆல்ரவுண்டர்களில் இந்த மாற்றத்தைச் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தியும் இருந்தது. இந்த நிலையில், இது குறித்த விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி இனி போட்டிக்கு முன்பே ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்ஸ்மேன், ஒரு வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் என ஒவ்வொரு அணியும் மாற்று வீரர்களாக அறிவிக்க வேண்டும். ஏதேனும் ஒரு வீரருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டு ஆட முடியாத சூழ்நிலை இருந்தால், அவருக்கு பதிலாக இந்த ஐந்து பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
விக்கெட் கீப்பர் ஆட முடியாமல் போனால், மாற்று வீரர்களில் வெறும் பேட்ஸ்மேனாக இருக்கும் ஒருவர் ஆட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக மாற்று வீரர்களில் இடம் பெற்று இருக்கும் பேட்ஸ்மேன் ஆடுவார். அதே போல வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர்களிலும் இணையான மாற்றம் செய்யப்படும். இதனால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. இந்த விதி ஜூன் 17 முதல் டெஸ்ட் போட்டிகளிலும், ஜூலை 2 முதல் ஒருநாள் போட்டிகளிலும், ஜூலை 10 முதல் டி20 போட்டிகளிலும் அமலுக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.