கிரிக்கெட் உலகக்கோப்பை அடியோடு மாற்றம்.. எலிமினேட்டர், சூப்பர் சீரிஸ் என புதுமை.. ஐசிசி அறிவிப்பு
மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களுக்கான வடிவத்தை அதிரடியாக மாற்றி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருக்கும் நிலையில் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எடின்பரோவில் நடைபெற்ற ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் இந்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கும். இதில் தரவரிசையில் கடைசியில் உள்ள 3 அணிகள் முதன்மை சுற்றுக்கு முன்பாக 'சூப்பர் சீரிஸ்' என்ற தகுதிச் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் ஒரு அணி மட்டுமே முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும், மற்ற 2 அணிகள் உடனடியாக வெளியேற்றப்படும்.

இதனைத் தொடர்ந்து, முதன்மை சுற்றுக்கு முன்னேறும் 12 அணிகள் தலா 6 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் 4வது இடத்தில் உள்ள 1 அணி என மொத்தம் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குத் தகுதி பெறும்.
டி20 உலகக் கோப்பையில் எலிமினேட்டர்
அதேபோல், டி20 உலகக் கோப்பை தொடரிலும் 'எலிமினேட்டர்' முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 20 அணிகள் தலா 4 அணிகள் வீதம் 5 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 10' சுற்றுக்கு முன்னேறும். இந்த 10 அணிகள் தலா 5 அணிகள் வீதம் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் 2 அணிகள் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும். 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் மீதமுள்ள 2 அரை இறுதி இடங்களைப் பிடிக்கும். இந்த அதிரடி மாற்றங்கள் உலகக் கோப்பை தொடர்களை இன்னும் பரபரப்பாக மாற்றும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
