மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பை ஐசிசி விரைவில் வெளியிட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியை தான் ரசிகர்கள் பெரிய அளவு பார்த்து வந்தனர். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறிய வடிவமாக ஒரு நாள் கிரிக்கெட் இருந்து வந்தது.

அதாவது பேட்டிற்கும், பந்திற்கும் சரிசமமான போட்டி இருந்து வந்தது. ஆனால் டி20 கிரிக்கெட் வருகைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் டீம் மாற்ற வேண்டும் என்று யோசித்த ஐசிசி பல விதிகளை மாற்றியது. அதில் குறிப்பாக ஒருமுனைக்கு ஒரு பந்து என இரண்டு பந்து நடைமுறையை பயன்படுத்துகிறது.
இதன் மூலம் ஆட்டம் முழுவதும் பந்து புதியதாக தான் இருக்கும். இதன் காரணமாக சுழற் பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்களின் ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து வந்தனர். இதனால் ஒருநாள் கிரிக்கெட் என்பது டி20யின் நீண்ட வடிவம் என மாறிவிட்டது.
இது ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டியது. இந்த நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் விதியை மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், வரும் ஜூலை மாதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வர ஐசிசி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி முதலாவது ஓவரிலிருந்து 34-வது ஓவர் வரை ஒரு முனைக்கு ஒரு புதிய பந்து என்ற முறை பயன்படுத்தப்படும்.
35 வது ஓவரிலிருந்து 50-வது ஓவர் வரை இரண்டு பந்திற்கு பதில் ஒரு பந்து பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைசி 16 ஓவரில் பழைய பந்து தான் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் போன்ற கலையை பயன்படுத்த முடியும். இதேபோன்று தலையில் அடிபட்டு மாற்று வீரர்களை அறிவிக்கும் கண்கஷன் விதியிலும் மாற்றத்தைக் கொண்டு வர ஐசிசி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.