மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக் கோரும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஏற்கனவே போட்டி அட்டவணையை பின்பற்றுமாறு வங்கதேச வாரியத்தை ஐசிசி வலியுறுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இந்தியாவில் வங்கதேச எதிர்ப்பு உணர்வை அதிகரித்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க பிசிசிஐ அறிவுறுத்தியதால் இரு நாடுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. "இந்தியாவிற்கு அணியை அனுப்ப பாதுகாப்பாக உணர்வில்லை" என பி.சி.பி தலைவர் அமினுல் இஸ்லாம் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பை, பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. வங்கதேசம் தனது முதல் மூன்று குரூப் ஸ்டேஜ் போட்டிகளை கொல்கத்தாவிலும், கடைசிப் போட்டியை மும்பையிலும் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பி.சி.பி.யின் இக்கோரிக்கை சிக்கலை உருவாக்கும் என கருதப்படுகிறது.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட அதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திங்களன்று மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் கூடினர். இது குறித்து, பி.சி.பி. உறுப்பினர்களுடன் தொலைபேசி கலந்துரையாடலுக்கு ஐ.சி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக, ஐசிசிக்கு பி.சி.பி. அனுப்பிய அறிக்கையில், தற்போதைய நிலைமைகளில் வங்கதேச தேசிய அணி இந்தத் தொடருக்காக இந்தியாவுக்குப் பயணிக்காது என இயக்குநர்கள் குழு தீர்மானித்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது."இதனால், வங்கதேசத்தின் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு இடத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு பி.சி.பி. முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது" எனவும் அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது. இப் பிரச்னை குறித்து ஐ.சி.சி. இதுவரை பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்கவில்லை.