
சுனாமியாய் மாறிய இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணியை பார்த்து, அரையிறுதி வரை வரும் என்றே யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், சுனாமியாய் மீண்டெழுந்து, எதிரணிகளை சுருட்டிபோட்டு, நடப்பு உலக கோப்பையில் மோதிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று வீர நடை போட்டு, அரையிறுதிக்குள் திமிறியபடி நிற்கிறது இந்தியா.

முதல் ஆறும் முத்துக்கள்
இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது.. தவான் 2 சதத்துடன் 367 ரன்களும், விராட் கோஹ்லி ஒரு சதத்துடன் 304 ரன்களும், ரோகித் ஷர்மா 1 சதத்துடன் 296 ரன்களும், ரெய்னா ஒரு செஞ்சூரியுடன் 277 ரன்களும், டோணி 172 ரன்களும், ரஹானே 164 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியாவின், முதல் ஆறு பேட்ஸ்மேன்களுமே, முத்துச்சரங்களாக காட்சியளிக்கின்றனர்.

பேட்டிங் இப்படி.. பவுலிங் அப்படி..
இந்தியா முதலில் பேட் செய்த அனைத்து போட்டிகளிலும், 300 ரன்களை கடந்துள்ளது, பேட்டிங் வலிமைக்கு சான்று. இந்திய அணிக்கு பேட்டிங்கை போலவே பந்துவீச்சும் நல்ல நிலையில் காணப்படுகிறது. 7 ஆட்டத்திலும் இந்திய பவுலர்கள் எதிர் அணிகளை ‘ஆல்அவுட்' செய்து சாதனை படைத்துள்ளனர்.

வேகப்பந்துன்னா இப்படி
வேகப்பந்தில் முகமது ஷமி முன்னிலையில் உள்ளார். அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார். உமேஷ் யாதவ் 14 விக்கெட்டும், மோகித் ஷர்மா 11 விக்கெட்டும் வீழ்த்தி அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

சுழலில் மூழ்கப்போகும் ஆஸ்திரேலியா
சுழல்பந்தில் அஸ்வின் முதுகெலும்பாக உள்ளார். அவர் 12 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இலங்கைக்கு எதிரான போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகிரும், டுமினியும் இணைந்து இலங்கையை 133 ரன்களில் சுருட்டி மடக்க உதவினர். எனவே இந்த பிட்சை, அஸ்வின் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஜடேஜாவும் அவருக்கு உறுதுணையாக இருப்பார்.

ரசிகர்கள் ஆதரவு எங்கப்பக்கம்
உலக கோப்பையில் 7 முறை, ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோற்றுள்ளது. 3 தடவை இந்தியா வெற்றி பெற்று இருந்தது. கடைசியாக கடந்த உலக கோப்பை கால் இறுதி போட்டியின்போது, ஆஸ்திரேலியாவை இந்தியா ஓடவிட்டு துரத்தியது. சிட்னியில் டிக்கெட் வாங்கியுள்ள 70 சதவீத இந்திய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த முறையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

அவிங்களும் டஃப்தான்
அதேநேரம், ஆஸ்திரேலியாவும் வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சமபலத்துடன் உள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அபாயகரமானவராக தெரிகிறார். 1 சதம், 2 அரை சதத்துடன் அவர் 301 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் வார்னர் 288 ரன்களும், ஸ்டீவன் சுமித் 241 ரன்களும், ஆரோன் பின்ச் 199 ரன்களும், வாட்சன் 178 ரன்களும் எடுத்துள்ளனர். கேப்டன் கிளார்க்கும் அபாயகரமான பேட்ஸ்மேன்தான்.

ஸ்டார்க்கு நாளை இருக்கு பிரேக்கு..
பந்துவீச்சில் மிட்சேல் ஸ்டார்க் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தம், 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஜான்சன் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஹசில்வுட், கம்மின்ஸ், பால்க்னெர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

வெற்றி நிச்சயம்..
சிட்னியில் கடந்த 35 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்துள்ளது. 2008ல் நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில், சச்சின் டெண்டுல்கரின் சதம் உதவியுடன், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதித்தது. ஆனால், பழைய வரலாற்றையெல்லாம் டோணி படை கண்டுகொள்வதாக இல்லை. ஏனெனில், டோணி அணிக்கு புது வரலாறுகளை படைப்பதிலேயே நேரம் சரியாக இருக்கிறது.

இந்தா வந்துட்டோம் நியூசி..
இறுதிப்போட்டியில் நுழைய இந்தியா- ஆஸ்திரேலியா இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் மெல்போர்னில், நியூசிலாந்தை வருகிற 29ம்தேதி சந்திக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











