சென்னை: பிள்ளையாரப்பா எப்படியாவது மேட்ச்ல ஜெயிக்க வையப்பா... என்று கிரிக்கெட் பிள்ளையாரே கதி என்று கிடந்தனர் சென்னை ரசிகர்கள். அரையிறுதி வரை வந்து விட்டோம். இந்த மஞ்ச சட்டை காரங்களை துவைச்சு தொங்கப்போடணும் என்று லட்சார்ச்சனை ஒருபக்கம் நடத்தினாலும் ஜோசியம் வேறு பார்த்து வெற்றியை உறுதிபடுத்தினர். சென்னை ரசிகர்கள்.
கிளி ஜோசியம்... எலி ஜோசியம் அல்ல சாணக்யா என்ற மீன் இந்தியா நிச்சயம் வெல்லும் என்று ஜோதிடம் சொன்னது. ஆனால் அத்தனையும் பொய்யா போச்சே என்று ஆதங்கப்படுகின்றனர் ரசிகர்கள்.

7 முறை வெற்றி
இந்த முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது முதலே ஒரே பரபரப்புதான். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்கி தொடர்ந்து 7 முறை, எதிரணியினரை ஆல்-அவுட் ஆக்கி, கம்பீரமாய் அரையிறுதிக்குள் நுழைந்தனர் இந்திய அணியினர்.
கோப்பை நமக்கே
கடந்த போட்டியில் வென்ற கோப்பையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற படபடப்போடு காத்திருந்தனர் இந்திய ரசிகர்கள். அரையிறுதிப் போட்டியில் இன்று நாம் மோதியது 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவானான ஆஸ்திரேலியாவுடன்.

புலியா? கங்காருவா
புலியா.... கங்காருவா? வீழ்வது யார்? வெல்வது யார்? என்பதுதான் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இதற்காக கங்காருவை புலி பாய்ந்து விரட்டுவது போன்ற கொடிகளை தயார் செய்து வைத்துக்கொண்டு சிட்னி மைதானத்தில் காத்திருந்தனர்.
எல்லா பயலுகளும் நம்ம பயலுகதான்
இந்திய ரசிகர்கள்தான் சிட்னி மைதானத்தின் முக்கால்வாசி டிக்கெட்டை வாங்கினர். எங்கு பார்த்தாலும் ஒரே புளு மயமாக காட்சியளித்தது. ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இது கூடுதல் நெருக்கடிதான்.
ஒரே பரபரப்புதான் போங்க...
இங்கேயோ அனுஷ்கா ஆஸ்திரேலியா போயிருக்காமே.... அப்போ கோஹ்லி அடிச்சு ஆடவாரா என்று சின்னப்பசங்க கூட கிரிக்கெட் பற்றி பேசினர். காய்ச்சல் சார் ஒருநாள் லீவு என்று அலுவலகத்துக்கும் கல்லூரிக்கும் பலர் விடுமுறை எடுத்து, ஆட்டத்தை ரசித்தனர்.
ஜோசியம் பார்க்கலயோ
இந்நிலையில் சென்னை, அண்ணா நகரில் அமைந்துள்ள ICWO என்னும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தினர் வளர்த்து வரும் 'சாணக்யா' என்னும் மீன் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெல்லப்போகும் அணி எது எனக் கணித்தது.
கச்சிதமாக கவ்வி
மீன் தொட்டிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொடி பொறித்த அட்டைகளைப் போட, சாணக்யா மெல்ல கொடி அட்டைகளை நோக்கி வந்தது. அனைவரும் ஆர்வத்துடன் சாணக்யாவைப் பார்த்தபடி இருக்க, சாணக்யா இந்தியக் கொடி பொறிந்த அட்டையைக் கவ்வியது.
சொன்னது பலிக்கலையே
முன்னதாக, இலங்கை- தென் ஆப்பிரிக்கா, இந்தியா - பங்களாதேஷ், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்திருக்கிறது சாணக்யா. ஆனால் இம்முறை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைப் பற்றி சாணக்யா கணித்த முடிவு பொய்யாகிவிட்டதே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்...
தண்ணியக் குடி தண்ணியக் குடி... அடுத்த உலகக் கோப்பையில பார்த்துக்கலாம் என்று ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்