இந்தியா - பாகிஸ்தான் ட்ரை சீரிஸ்.. ஆயுதத்தை கையில் எடுத்த ஐசிசி.. இந்திய அரசு மனது வைத்தால் நடக்கும்
மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே மூன்று நாடுகள் பங்கேற்கும் ட்ரை-சீரீஸ் அல்லது நான்கு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான முயற்சிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசிக்க உள்ளது. கிரிக்கெட் தொடர்களின் வருமானத்தை அதிகரிக்க இந்த அதிரடித் திட்டம் குறித்து, துபாயில் வரும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஐசிசி கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக, இரு நாடுகளும் 2013-க்கு பிறகு இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த நிலையில், 1990-களின் இறுதியில் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் நடந்த ட்ரை சீரீஸ் போல மீண்டும் பல தொடர்களை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

இருதரப்பு தொடர்களை விட, இதுபோன்ற பல நாடுகள் பங்கேற்கும் ட்ரை சீரீஸ் தொடர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்று ஐசிசி கருதுகிறது. பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாட இந்திய அரசு முற்றிலுமாக மறுத்து வரும் நிலையில், ட்ரை சீரீஸ் தொடர்களில் விளையாட அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில் ஐசிசி இந்த புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஒருவேளை இந்தத் தொடர் நடத்தப்பட்டால் அது ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற நடுநிலையான நாடுகளில் மட்டுமே நடத்தப்படும். 12 டெஸ்ட் விளையாடும் நாடுகள் மற்றும் 8 இணை நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் 2027 முதல் 2031 வரையிலான எதிர்கால சுற்றுப்பயண கால அட்டவணை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த 2025 ஆசியக் கோப்பை தொடரின் போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான கைகுலுக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது. மேலும், இந்திய அணி பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு மேலும் விரிசலடைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எதிராக விளையாட தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தாலும், இந்திய அரசின் இறுதி முடிவைப் பொறுத்தே ஐசிசியின் இந்தத் திட்டம் சாத்தியமாகுமா என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications

