மும்பை: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணி பங்கேற்குமா என்ற குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா வந்து விளையாட மறுத்தால், தொடரை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வங்கதேசத்திற்கு ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில், இறுதி முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 21ஆம் தேதியுடன் கெடு முடிவடைந்த நிலையில், ஐசிசி மற்றும் உறுப்பு நாடுகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கதேசத்திற்குச் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இதை அடுத்து வங்கதேச கிரிக்கெட் அமைப்பிற்கு கடைசியாக 24 மணி நேர கெடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் போட்டி அட்டவணையை மாற்றுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 16 வாக்குகளில், 14 வாக்குகள் அட்டவணையை மாற்றக்கூடாது என்று பதிவாகின. வெறும் இரண்டு பேர் மட்டுமே மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், வங்கதேசத்தின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இன்று (ஜனவரி 22) இறுதி முடிவு எடுக்க வங்கதேசத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் அதே பிடிவாதத்துடன் இந்தியா வர மறுத்தால், வங்கதேச அணி உலகக்கோப்பைத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்படும். குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசத்திற்குப் பதிலாக, ஸ்காட்லாந்து அணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசியல் மற்றும் நிர்வாக மோதல்களால் வங்கதேச வீரர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்துப் பேசிய கேப்டன் லிட்டன் தாஸ், "நாங்கள் உலகக்கோப்பையில் விளையாடுவோமா அல்லது பார்வையாளர்களாக இருப்போமா என்பது எங்களுக்கே தெரியவில்லை" என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் வங்கதேசத்திற்குப் போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த மொத்த விவகாரமும் ஐபிஎல் தொடரில் இருந்துதான் விஸ்வரூபம் எடுத்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, இந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான மனநிலை உருவானது. இதன் எதிரொலியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.20 கோடி ரூபாய்க்கு வாங்கிய வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்தது.
இதற்குக் கண்டனம் தெரிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறி, போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால், இந்தியாவில் வீரர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், தேவையற்ற காரணங்களைக் கூறித் தொடரைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. வங்கதேச வாரியம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அந்த அணி உலகக்கோப்பையில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்பது தெரியவரும்.